செவ்வாய், 24 டிசம்பர், 2013

சிரிக்க வைக்க என்ன செய்யலாம்?

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அது இது எது என்னும் நிகழ்ச்சியில் சிரிச்சாப் போச்சு பகுதியில் சிரிக்க வைக்க வருகிறவர்கள் தம் நகைச்சுவைத் திறமையைக் காண்பித்து விருந்தினர்களை சிரிக்கவைக்க வேண்டும். ஆனால் அதில் வருகிறவர்கள் விருந்தினர் அருகில் போய்நின்று கிச்சுகிச்சு மூட்டாத குறையாக சிரிங்க சிரிங்க என்று சொல்வதும் டேபிளில் இருந்து கையை எடுக்காதே என்று சொல்வதும் சரியில்லையே! இனியாவது இவற்றை அனுமதிக்காமல் தூர இருந்தே சிரிக்க வைக்க முயற்சிப்பார்களா?


சன் தொலைக்காட்சியில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களைப் பற்றிய சிறப்பு தகவல்களை தந்தார் சுகிசிவம் அவர்கள். அவருக்கு சீராச்செல்வர் என்ற பெயர் உண்டு- சீராப் புராணத்தின் விளக்கங்களைச் சொல்வதாலும் சீராதவர் (கோபப்படாதவர்) என்பதாலும் அப்பெயர் அவருக்குப் பொருத்த மானதே என்றும் அவர் கூறியவை இதற்குமுன்னதாக இருமுறை ஓளிபரப்பப் பட்டதே! (நான் பார்க்காத போது எத்தனைமுறை ஓளிபரப்பானதோ அது எனக்குத் தெரியாது). கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியிலும் அவரது உரை இடம்பெறும் என்று விளம்பரப் படுத்துகிறார்களே அதையாவது புதிதாகப் பதிவு செய்து ஒளிபரப்புவார்களா அல்லது அதையும் முன்பு ஒளிபரப்பியதைத் தேடிப்பிடித்து மறுஒளிபரப்புச்செய்வார்களா?

சன்தொலைக்காட்சியின் தெய்வமகள் தொடரில் தாரிணியை வெகுளியாக அப்பாவியாக சித்தரித்து வந்தார்கள். இப்போதோ அவரை ரொம்ப விவரமான வராகக் காண்பிக்கிறார்கள். தாரிணி தன் மாமியாருடன் வரும் வழியில் பிரகாஷின் அண்ணியை பார்த்தபோது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, வீட்டில் அதுபற்றி விசாரிக்கும் போது தான் அப்படி காலில் விழவில்லை என்று சாதிக்கிறார்.  வெகுளியான தாரிணி நிச்சமாக இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டாள். கதையை சுவாரஸ்யமாக்க இப்படி பாத்திரத்தின் குணத்தையேவா மாற்றுவது. தொடர் என்றால் எதையும் பார்க்க க்கூடாதோ!

------------------------------------------------------------------------
தினத்தந்தி தொலைக் காட்சியில் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் வெட்டியான் வேலைபார்க்கும் பிதாமகள்களை சந்தித்துப் பேசினார் குஷ்பு. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் வேலையை மிகத்தைரியமாக செய்யும் அவர்கள் அந்த வேலையை ஒரு தர்மமாகவே செய்வதாகச் சொன்னார்கள். ‘எங்களுக்கு உடம்புக்கு ஏதும் வந்தால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் கேட்டதில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. அரசு சார்பில் வேலை செய்யும் அவர்களுக்கு அரசு ஏதும் உதவலாமே. 

சனி, 7 டிசம்பர், 2013

மறு ஒளிபரப்புச் செய்ய ஒரு வேண்டுகோள்



சன் தொலைக்காட்சியில் சாம்பியன் நிகழ்ச்சியில் நன்கு தம் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு நிகழ்ச்சியின் நடுவர்கள் இருவரும் ஆளுக்கு 5000 புள்ளிகள் வீதம் மொத்தம் 10,000 புள்ளிகள் தந்து அதை அப்பிடியே பணமாக மாற்றி ரூபாய் 10,000 க்கான காசோலையை தந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. ஆனால் சில சமயங்களில் மாற்றுத்திறனாளிகள் நால்வராக அல்லது ஐவராக வந்து தங்கள் திறமையை காண்பிக்கும் போதும் அவர்களுக்கும் அதே ரூபாய் பத்தாயிரத்தைதான் தருகிறார்கள். இது சற்று நெருடலாக இருந்தது.. அந்த நிகழ்ச்சியின் சார்பாக கொடுக்கும் அந்த தொகை நியாயமானதாக இருக்கலாம். அந்த நேரங்களில் சன் தொலைக்காட்சியின் சார்பாக அந்த வெகுமதி இல்லாமல் சற்று கூடுதலாக ஒரு தொகையை அந்த திறமைசாளிகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு இது ஒரு ஊக்குவிப்புத் தொகையாக மட்டுமில்லாமல் உதவித்தொகையாகவும் அமையுமே. இதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலனை செய்வார்களா?
முன்பே குறிப்பிட்டது போல அமுதமொழிகளில் சாலமன் பாப்பையா ஏற்கனவே சொன்ன விவேக சிந்தாமணியின் தாய் பகையானால் விளக்கத்தை மீண்டும் ஒளிபரப்பி, சுகிசிவம் அவர்கள் சொன்ன சிலம்பொலி செல்லப்பா அவர்களின் பெருமையையும் மறு ஒளிபரப்பு செய்தார்கள். காலையில் எழுந்து ஆவலுடன் இந்நிகழ்ச்சிகளை பார்க்க டீவி முன் உட்காருபவர்களை இப்படி எத்தனை நாட்களுக்குத் தான் ஏமாற்றுவார்களோ தெரியவில்லை. (ஏமாற நீங்கள் எல்லாம் இருக்கும் வரை என்று சொல்வது என் காதுகளில் விழுகிறது) இத்தகவல்கள் விழ வேண்டியவர்கள் காதுகளில் விழாதது ஏன் என்றுதான் புரியவில்லை. (ராசிபலன்களும் இப்படிப்பட்ட மறு ஒளிபர்பாகத்தான் இருக்குமோ!)
சன் செய்திகளில் சிறப்புப் பார்வையில் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரழப்புகள் பற்றியும், விபத்துக்களுக்கான காரணங்கள் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமூறைகள் பற்றியும் விளக்கினார்கள். மிகவும் பயனுள்ள அலசல் இது.  எதை எதையோ மறு ஒளிபரப்புச் செய்பவர்கள் இதை மறுஒளிபரப்புச் செய்தால் ஓரிரு விபத்துக்களாவது குறையுமே!  (ஜனவரிமாதம் முதல்வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக அகில இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே அந்த நேரத்தில் இவற்றை ஒளிபரப்புச் செய்து அந்நிகழ்வில் சன் தொலைக்காட்சியும் பங்கேற்கலாமே)




தெய்வமகள் தொடரில் காலம்தான் சிலவிஷயங்களுக்கு தீர்வு சொல்லவேண்டும் என்று சொல்லும் சுரேஷ் காலத்திற்காக பொறுத்திருக்காமல் ‘’இந்த நேரத்தில் தாரிணி கழுத்தில் தாலி கட்டுகிறேன்’’ என்று கூறி கோவிலில் உறவினர் யாரும் இல்லாத நிலையில் தாரிணியைத் திருமணம் செய்து கொள்கிறானாம். ‘’எனக்குத் தெரியாமல் என்னைத்தூக்கி வந்துவிட்டீர்கள். நான் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்’’ என்று கூறி தாரிணியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் அவனது பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும். இப்படி ஒரு பாத்திரத்தை ஒரு விதமாக சித்தரித்து திடீரென வேறு விதமாக மாற்றுவது இயக்குனர் குமரனுக்கு வாடிக்கைதானே (இதற்கு (திருமதி) செல்வமே நல்ல உதாரணம்)  . 


ஞாயிறு, 17 நவம்பர், 2013

விபத்துக்கு காரணம் போனில் கூப்பிட்டவரா அல்லது போனில் பேசியவரா?







 
 கார் விபத்துக்குள்ளாவதற்கு செல்ஃபோனில்
கூப்பிட்டவர் காரணமா கார் ஓட்டும் போது
எடுத்துப் பேசியவர் காரணமா?







 ‘புது யுகம்’ தொலைக் காட்சியில் குரு சிஷ்யன் நிகழ்ச்சியில் நடிகர் நாசர் இயக்குனர் மிஸ்கின் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி இடம் பவற்றது. அந்நிகழ்ச்சியில் நாசர் ஒரு பக்கம் பார்ப்பது போலவும் மிஸ்கின் இன்னொரு பக்கம் பார்த்து பேசுவது போலவும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என்பதற்காக பார்ப்பவர்களை இம்சிக்கக்கூடாதல்லவா? (தனியாக ஒருவரை மட்டும் காட்டுவது வேறு)  இருவரும் இரண்டு திசைகளில் பார்த்துக்கொண்டு பேசுவது எப்போதோ ஓரிரு முறையல்ல தொடர்ந்து அப்படியே காண்பித்தார்கள் என்பதுதான் கொடுமை.





        

·         நாதஸ்வரம் தொடரில் மனைவி தொலைபேசியில் அழைக்க காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவளது கணவன் காரை ஓட்டிக்கொண்டே செல்ஃபோனை எடுத்துப் பேச கார் பெரும் விபத்துக்குள்ளாகி படுகாயமடைகிறார் செல்வரங்கம். கணவர் காயமடைய தானே காரணமாகிவிட்டதாக மனைவி புலம்புகிறார். நான் பேசியதால்தானே இப்படி நடந்தது என கணவன் சொல்வதாகக் காட்டியமைக்கு இயக்குனரைப் பாராட்டலாம்.
கூப்பிடுபவர்களுக்கு மறுமுனையில் இருப்பவர் என்ன செய்கிறார் என்று எப்படித் தெரியும். கூப்பிடப்படுபவர் கார் ஓட்டிக்கொண்டிருந்தால் காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பேசலாம் அல்லது பிறகு பேசுகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டுப் பிறகு பேசலாம். இதனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி விபத்துக்களை குறைக்க உதவி இருக்கலாம்.. 



·         முந்தானை முடிச்சு தொடரில் பத்திரப் பதிவு அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் கந்தசாமி குடும்பத்தினரும் பழனியப்பனும் நெடுநேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடு வதாகக் காண்பித்தார்கள். ஒரு அலுவலகத்தில் இப்படி சத்தம் போட்டு வாக்குவாதம் செய்வதை யாரும் தடுக்காமல் இருப்பது எப்படி?  வாணி ராணி தொடரிலும் இப்படி காவல் நிலையத்தில் நடக்கிறது இதையும் யாரும் கேட்கவே இல்லை. காவல்நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டர் இல்லை என்று விளக்கம் சொலவார்களோ?!


தெய்வமகள் தொடரில் பிரகாஷ் நாலு லட்சம் பணத்தைக் கடன் வாங்கிக்கொண்டு பைக்கில் நண்பரின் பின்னால் அஜாக்கிரதையாக பணத்தை வைத்துக் கொண்டு செல்வதாகவும  அண்ணியின் கையாள் காரில் பின்தொடர்ந்து வந்து பணத்தைப்பறித்துக் கொண்டு ஓடுவதாகவும் காட்டினார்கள்.  நாலு லட்சத்தை கையில் வைத்திருப்பவர்கள் யாரும் இவ்வளவு கவனக்குறைவாக செல்லமாட்டார்கள். (பத்திரமாக எடுத்துச் செல்லும் போது சாமர்த்தியமாக ஏமாற்றி திருடுவது வேறு) தொடர்களில் மட்டுமே கதையைவளர்க்க இப்படியெல்லாம் காண்பிக்கிறார்கள். இதைப்பிற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்களா?


ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாளுக்கும் அமுதமொழிகளுக்கு நேர்ந்த கதிதானா?









சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகி நெடுந்தொடரில் பாத்திரங்கள் வசனம் பேசாத நேரங்களில் பின்னணி இசையைப் போடுகிறார்கள். வசனத்தின் ஒலியைவிட பின்னணி இசையின் சத்தம் மிக அதிகமாக உள்ளது. அந்த பின்னணி இசை பார்ப்பவர்களின் காதுகளை பாதிக்கிறது. இது ஏதோ ஒரு சில எபிசோட்களில்தான் அப்படி இருக்கிறது என்று பார்த்தால் எல்லா நாட்களுமே அப்படி காதுகளை பாதிக்கும்படிதான் இருக்கிறது.  அந்த தொடர் தயாரிப்பாளர்கள் இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஒளிபரப்பாகும் சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகள் புதிதாக ஏதும் பதிவு செய்யப்படவில்லை போலிருக்கிறது. ஒளிபரப்பியதையே ஒளிபரப்பி போரடிக்கிறார்கள். நாய் வால் எழுத்தாணி ஆகாது, கூட்டி பெருக்கி சுத்தப் படுத்தினாலும் சுடுகாடு வீடாகாது தாய் பேச்சைக் கேட்காத மகன் தானும் எதையும் கொடுக்கமாட்டான் பிறரையும் கொடுக்க விடமாட்டான் என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும், குருவின் உபதேசம், மனைவியிடம் பேசிய அந்தரங்கம், போன்றவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அநிகாலை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை யார் பார்த்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று சன்தொலைக் காட்சியினர் நினைகிறார்களோ?’

நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை அவர்களிடம் தவில் வாசித்து வந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்  அவர்கள் யாராவது எங்காவது ‘நாகப்பட்டனம்’ என்று ஊர் பெயரைச் சொன்னால் அவர் எழுந்து வணங்கிவிட்டு உட்காருவாராம். தன் குருவிடம் அவர் கொண்டிருந்த மரியாதையைப்பற்றி சுகிசிவம் அவர்கள் கூறிய விவரத்தை மீண்டும் இன்று இந்த நாள் இனியநாள் பகுதியில் ஒளிபரப்பினார்கள். போகிற போக்கைப் பார்த்தால் சுகிசிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சிக்கும் அமுதமொழிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஏற்படும் போல் இருக்கிறது. சன் தொலைக்காட்சியும் மறுஒளிபரப்பு தொலைக்காட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது போல தெரிகிறது..  




செவ்வாய், 15 அக்டோபர், 2013

lதொடர்கள் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பப் படுவதால் யாருக்கு நன்மை அதிகம்?


சன்தொலைக்காட்சியில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மெகாதொடர்களில் பெரும்பாலனவை சனிக்கிழமை களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அதாவது மாலை 6.30 மணிமுதல் 9.00 மணி வரை ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும் சனிக்கிழமைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. அதனால் இது ரொம்ப நாள் நீடிக்காது. உடனே சந்தோஷப் படாதீர்கள். சனிக்கிழமைகளில் 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வேறு நேரங்களை ஒதுக்கிவிட்டு 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் தொடர்களையும் நீட்டித்துவிடுவார்கள் ஏனென்றால் அவற்றில் ராதிகா தொடரும் விகடன் தொடர்களும் உள்ளனவே..

இந்த தொடர்களைப்பார்த்து இவற்றிற்கு அடிக்ட் ஆகிவிட்டவர்களுக்கு இது நற்செய்தியாக இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு சனி ஞாயிறுகளில் போர் அடிப்பது போல உணர்ந்து வந்தவர்கள்.   இத்தொடர்களால் குடும்ப உறுப்பினர்களோடு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை, மனைவிமார்கள் கணவனையும், குழந்தைகளையும் அத்தொடர் நேரங்களில் சரியாக கவனிப்பதில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இவ்வேதனை மேலும் ஒரு நாள் கூடுவதால் அவர்கள் இந்த நீட்டிப்பை வரவேற்க மாட்டார்கள். எது எப்படியோ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விளம்பர வருமாணம் கூடுவதால் அவர்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும்.

இத்தொடர்களை ஜவ்வாக இழுத்து பல மாதங்கள் வருடங்கள் என நீட்டித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மேலும் ஒரு நாளைக்கு கதை பண்ணவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்கள் எப்படி எப்படியெல்லாம் ஐடியா செய்து தொடர் பார்ப்பவர்களை இன்னும் கஷ்டப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.    

விஷேச நாட்களில் எல்லா தொலைக்காட்சி களிலும் ஒளிபர்ப்பப்படும் சிறப்பு  நிகழ்ச்சிகள் அனத்திலும் ஒரே மாதிரியே உள்ளன. எதிலும் புதுமைஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வரஇருக்கும் திரைப்படங்களின் விளம்பர முன்னோட்டங்களாக பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளாக  நடிக நடிகையரின் ஏனோதானோ பேட்டிகளாகவே உள்ளன. அவரவர் தொலைக்காட்சியில் எது ஃபேமஸ் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதன் சிறப்பு நிகழ்ச்சி என்றும், முன்பே ஒளிபரப்பான திரைப்படங்களை சிறப்புத் திரைப்படங்கள் என்றும் போரடித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வத்தையே குறைத்துவிடுவார்கள் போலிருக்கிறது





திங்கள், 7 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாள் ஆகுமா?


இந்த நாள்

இனிய நாள்

ஆகுமா?


இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் சனி ஞாயிறுகளில் சுகிசிவம் சன் தொலைக்காட்சியில் பேசி வருகிறார். தமிழகத்தில் தூங்க வைப்பதற்கு தாலாட்டு காலையில் எழுப்புவதற்கு திருப்பள்ளி எழுச்சி, இறந்தால் ஒப்பாரி என்று எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு. பாடப்பட்ட பாடலை வைத்து அது எந்த நேரத்தில் பாடப்பட்டது என்று சொல்லிவிட முடியும்..இப்படிப்பட்ட பாடல்கள் இன்று மேடைக்கச்சேரிகளாக மாறிவிட்டன. பங்கு பெறவேண்டிய மக்கள் இன்று பார்வையாளர்களாக உள்ளனர். என்று பல குறிப்புகளைச் சொன்னார் pசுகிசிவம். ஆனால் இது ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு.
எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக்கூடியவர்.சுகிசிவம். அவரது பேச்சைக் கேட்பவர்கள் சிறிதளவாவது அவர் பேசும் பிரச்சினை பற்றி யோசிப்பார்கள். இப்பகுதியை மறுஒளிபர்ப்பு செய்து அப்படிப்பட்டவரின் நேரத்தையும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நேரத்தையும் வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்? வாரத்தில் இரண்டு நாட்களே ஒளிபரப்பாகும் ‘இந்த நாள் இனிய நாள்’’ பகுதியைக்கூட புதிதாக ஒளிபர்ப்ப முடியாதா? நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இதுபற்றி யோசிப்பார்களா?  சுகிசிவத்தின் பேச்சை எதிர் பார்த்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு காலையிலேயே மறு ஒளிபரப்பைப் பார்த்தால் அந்த நாள் எப்படி இனிய நாள் ஆகும்??  



ஒரு வழியாக ஒரு மெகாத்தொடர் ‘உதிரிப்பூக்கள்’ முடித்து வைக்கப்பட்டது. இறந்து போன கதாநாயகி சக்கியும் இறந்து போன சக்தியின் தாயும் உயிரோடு இருக்கிறார்கள் என்று அவர்களை உயிரோடு கொண்டு வந்து நிறுத்தியதால் ஏதேதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் உப்புச்சப் பில்லாமல் ஏனோதானோ என்று எல்லாரும் திருந்திவிட்டார்கள் என்று தொடரை முடித்து விட்டார்கள்.
தொடரை எப்படியெல்லாம் நீட்டமுடியும் என்பதை இவ்வளவு வாரங்கள் பார்த்து வந்தவர்கள் கடைசி ஒரு வார காட்சிகளைப் பார்த்தால் தொடர் தயாரிப்பாளர்கள் நினைத்தால் ஒரு தொடரை எப்படி சீக்கிரம் முடிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.. மூன்று வில்லன்கள் ஒரே இடத்தில் இருந்தும் சிவநேசன் பேச்சைக் கேட்டு மனம் திருந்தி விடுகிறார்களாம். நிலா, நிலாவின் அப்பா, சக்தியின் மாமியார், சக்தியின் நாத்தனார்கள் எல்லோரும் திருந்திவிடுகிறார்களாம். எப்படியோ ஒருவழியாக தொடரை முடித்தார்களே என்று சந்தோஷப்படலாம்.    




வியாழன், 19 செப்டம்பர், 2013

இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் தொடர் இயக்குனர்கள்.



Ø  உதிரிப்பூக்கள் தொலைக்கட்சித் தொடரில் இறந்ததாகக் காட்டப்பட்ட கதாநாயகியும், கதாநாயகியின் அம்மாவும் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று கதையை நகர்த்துகிறார்கள் என்று பார்த்தால் இதற்கு போட்டியாக முந்தானை முடிச்சு தொடரில் இறந்த- இல்லை இல்லை - கொலை செய்யப்பட்ட சதீஷ் பாத்திரத்திற்கு திடீரென உயிர் கொடுத்திருக்கிறார்கள். இறந்த சதீஷ்னுடைய  தம்பி அவனைப்போலவே இருக்கிறான் இருவரும் இரட்டைப் பிறவி (ட்வின்ஸ்) என்றும் சதீஷினுடைய தம்பியை சதீஷ் போல நடிக்க வைக்க  திட்டமிடுகிறாளாம் வில்லி பிரேமா. எப்படியோ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்களாக மாறி இருக்கிறார்கள் தொடர் இயக்குனர்கள். கதையை நீட்டிக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் வர்கள். 


Ø  யாரிடமாவது  அவர்கள்  குடியிருக்கும் வீட்டைக் காலிசெய்யச் சொன்னால் ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ டயம் தாருங்கள் வேறு வீடு பார்த்துக்கொண்டு போய்விடுகிறோம் என்றுதான் சொல்வார்கள்..  ஆனால் தொடர்களில் மட்டும் வேறு விதமாகத்தான் நடக்கும்.  யாரையும் குடும்பத்தோடு வெளியே போய்விடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எல்லோரும் (பெரியவர்கள் சிறியவர்கள் வித்தியாசமில்லாமல்) வீட்டைவிட்டு வெளியே போய் ரோட்டில் இறங்கி நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.. அடுத்த வேளைக்கு எங்கு போவோம் எப்படி இருப்போம் என்று எதையும் யோசிக்க மாட்டார்கள் (அவ்வளவு ரோசம் மானம் உள்ளவர்கள்.)  யாரும் உதவ முன் வந்தாலும் அதை ஏற்கவும் அவர்களுக்கு தன்மானம் இடம் கொடுக்காது –- உதாரணம் தெய்வமகள் மற்றும் வாணி ராணி இரண்டு தொடர்களிலுமே அப்படித்தான் (அதுவும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள்) கதையில் சுவாரஸயமும் கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக எதார்த்தத்தைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படியா திரைக்கதை அமைப்பார்கள்?  

புதன், 11 செப்டம்பர், 2013

இறந்து போன கதாநயாயகியின் தாயும் உயிரோடிருக்கிறாராம்





·       நெடுந்தொடர்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியையே இறந்ததாகக் காட்டுகிறார்களே இதை எப்படி நம்புவது? என்று கேட்டு எழுதியிருந்தேன்.   உதிரிப்பூக்கள் தொடரில் கதாநாயகி சக்தி பாண்டிச்சேரியில் உயிரோடு இருப்பதாகவும் இது அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாது என்றும் கதையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இப்போதோ திடீரென்று இதற்கும் முன்பே இறந்து போனதாகக் காட்டிய சக்தியின் அம்மா உயிரோடு இருப்பதாகவும் சக்தி தன் அம்மாவைப் சந்திப்பது போலவம் காட்டுகிறார்கள்.  கதாநாயகனோ கதாநாயகியோ அல்லது முக்கிய பாத்திரமோ இறந்து போனால் கதை சீக்கிரமே முடிந்து போய்விடுமே!  அப்புறம் அது நெடுந்தொடர் ஆகாதே! எனவே இவர்களை இறந்து போக விடமாட்டார்கள் என்று டீவி பார்ப்பவர்களுக்குத் தெரியாதா? ஏன் இப்படி இறந்து போனதாகக் காண்பிப்பதும் பின்னர் உயிரோடு இருப்பதாக்க் காட்டுவதையும் தொடர் இயக்குனர்கள் எப்போதுதான் விடப்போகிறார்களோ?


·       .பிள்ளைநிலா தொடரில் நிலா போலிசுக்குத் தெரியாமல் மறைந்து வாழும் தன் தந்தையை மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் வீட்டில் ஒளிய வைத்துக் கொண்டிருப்பதாகவும் அதை மற்றவர்கள் யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் தொடர் பார்ப்பவர்கள் காதுகளில் பூச் சுற்றுகிறார்கள். சரி கதைதானே விட்டுவிடலாம் என்று பார்த்தால் இப்போதோ அவர் சமையலறைக்குப் போய் தானே தோசை சுட்டு, மற்றவற்றை செய்து  சாப்பிடுவதாக்க் காட்டுகிறார்கள். மறைந்திருக்கும் அவர் கதவை கொஞ்சம் திறந்து வீட்டிலுள்ளவர்களைப் பார்ப்பது போலவும் அவர்கள் இவரைப் பார்க்காதது போலவும் காட்டுகிறார்கள். என்னதான் தீயசக்தி வீட்டில் நடமாடுவதாக வீட்டிலுள்ளவர்கள் பயந்து போய் இருப்பதாக சொன்னாலும் போலிஞுக்குப் பயந்து ஒளிந்து இருப்பவர் எந்த பயமும் இன்றி இப்படித்தான் நடந்து கொள்வாரா? 



·       மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் விநாயக சதுர்த்திக்காக ஸ்பெசல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்க கலைஞர் டீவியில் மட்டும் ‘’விடுமுறைதின’’  சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்பிக் கொண்டிருந்தார்கள்.  இவர்களுக்கு விநாயக சதுர்த்தியில  நம்கிக்கை இல்லையென்றால் அது தவறில்லை. சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தாமல் விட்டுவிட வேண்டியதுதானே. (வருமாணத்தை விட்டுவிடக்கூடாது என்பதால்தானே சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்) விநாயகர்தினத்தன்று ஒளிபரப்பப்பட்டவை விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் மற்ற விடுமுறை நாட்களிலும் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்புவார்களா? 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உலக பதிவர் திருவிழா.2013 க்கு வருகைதரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்






இரண்டாம் ஆண்டு  உலக பதிவர் திருவிழா.2013 க்கு வருகைதரும் அனைத்து பதிவர்களையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.  





இந்த நான் இனிதே அமையவும் விழா சிறப்பாக நடைபெறவும் 
வாழ்த்துகிறேன்

சனி, 31 ஆகஸ்ட், 2013

ஆஹா என்ன ருசி!



# ‘’தமிழ் சினிமா கிளப்’’ சேனலில் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் போது அத்திரைப்படத்தின் பெயரை வலது பக்க மேல் மூலையில் காண்பிக்கிறார்கள். அதனால் எந்த நேரத்தில் அந்தச் சேனலைப் பார்த்தாலும் அபோது என்ன திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.  மற்ற சேனல்களிலும் இது போல ஒளிபரப்பப்படும் திரைப்படத்தின் பெயரைக் காண்பித்தால் பார்ப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்குமே – செய்வார்களா?!


 # சன்தொலைக்காட்சியில் ‘’ஆஹா என்ன ருசி’’ என்ற சமையல் நிகழ்ச்சியை ஒளிபர்ப்பி வருகிறார்கள், அந்நிகழ்ச்சியை செஃப் ஜேக்கப் தயாரித்து வந்தார். அவர் இறந்து சில மாதங்களாகி விட்டன. அவர் இறந்த பிறகும் அந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபர்ப்பாகி வருகிறது. ஜேக்கப் சமைக்கும் சில காட்சிகளும் அதில் இடம் பெறுகின்றன. ஒருவர் இறந்த பிறகும் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாவது ஆச்சர்யமாக உள்ளது.(அவ்வளவு காட்சிகள் தயார் செய்து வைத்துள்ளாரா?)

#சிறுவர் சிறுமிகளுக்கான சன் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் சிறுமி ரேணுகா ‘’மல்லிகை முல்லை மலர்ப்பந்தல் பச்சை வாழை தோரணங்கள் எல்லாம் எதுக்காக?’’’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்.உடனே கங்கை அமரன் அனுராதா ரமணன் புஷ்பவனம் குப்புசாமி மூவரும் அந்தப் பெண்ணின் அருகே சென்று பாடலை நிறுத்தச் சொல்லி சரியா இல்லையே உனக்கு ‘’கம்ஃபர்டபிலா இருக்கா?’ ’என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்ப பாடவேண்டிய பாடலே வேறே ஹேப்பி பர்த்டே இல்லே பாடணும் என்று சொல்லி கேக் வெட்டி பாடிய சிறுமிக்கு பர்த் டே கொண்டாடினார்கள். அதை முடித்து அப்பாடலைப் பாடச் சொன்னார்கள்.  பாட்டைப் பாடியதில் குறை ஏதுமில்லாமல் பாடலை இடைமறித்து இப்படி பயமுறுத்தி பர்த் டே கொண்டாட வேண்டுமா?  அச்சிறுமி பாட வந்ததுமே பிறந்த நாள் கொண்டாடிவிட்டு பிறகு பாடச் சொல்லி இருக்கலாமே!  இந்த நாடகம் அந்த மேடையில். தேவைதானா?

Live Telecast of second World Bloggers Meet



ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

புதிய அமுத மொழிகள் ஒளிபரப்ப மாட்டார்களா?

#தினந்தோறும் திருக்குறள் விளக்கம் வழங்கிக் கொண்டிருந்த சாலமன் பாப்பையா அவர்களின் அமுதமொழிகள் நிகழ்ச்சியை ஞாயிறு காலை மட்டும்தான் கேட்கமுடியும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டார்கள்- சரி அன்றாவது பழைய இலக்கியங்களை கேட்கலாமே என்று தொடர்ந்து அந்நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்றால் ஒளிபரப்பிய அதே பகுதியை திரும்பத் திரும்ப ஒளிபர்ப்பிக்கொண்டிருக்கிறார்கள்
நாய்வாலை அளந்து நறுக்கி தீட்டினாலும எழுத்தாணியாக ஆகாது,. சுடுகாட்டை பெருக்கி விளக்கேற்றினாலும் வீடாகாது. அது போல தாய் பேச்சைக் கேட்காத சண்டியன் கஞ்சனாக ஈவாரை ஈயஒட்டான், தானும் தரமாட்டான். என்ற விவேக சிந்தாமணியின் கருத்துக்களையும் இதே போல பல ஓளிபர்ப்பிய பகுதிகளையும் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது நியாயமா? இவர்களைக் கேட்க யாருமே இல்லை என்ற தைரியத்தில்தானே இப்படி செய்கிறார்கள்.

#கார்த்திகைப் பெண்கள் தொடர் முடிந்தது. கதையின் முடிவில் வழக்கம் போல வில்லன் திருந்துவதாகக் காட்டினார்கள். (வில்லன் ஜெயிலுக்கும் போய் ஜெயிலில் இருந்தபோது திருந்தினார் என்று சொன்னால்கூட பராவாயில்லை) வில்லனின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்ற காரணத்திற்காக அவனை கொன்றுவிட்டதற்காக வருந்தி அவனது பெற்றோரை ஜெயிலுக்கு வரவழைத்து அவர்களிடம் தன் மகள் ஆர்த்தியை மகளாக அவர்களிடம் ஒப்படைப்பதும் தன் ரைஸ் மில்லை அவர்களுக்கு எழுதி வைப்பதும் நம்பும்படியாக இல்லையே.,

# ஸ்நிக்கர்ஸ் விளம்பர்த்தில் இப்போது 100% வெஜிடேரியன் என்று போடுகிறார்களே அப்படியென்றால் இதுவரை மழுவதும் வெஜிடேரியன் இல்லையா? அப்படியென்றால் அதை அறிவிக்காதது ஏன்?

# ‘’பாலுசாமி என்னை பொடியன்னு கூப்பிடறான்’’ என்று சொல்லும் சிறுவனுக்கு ‘’ஒரு காதில வாங்கி இன்னொரு காதிலே விட்டுறு’’ என்று டாக்டர் ஆலோசனை சொல்வதும் அதற்கு சிறுவன் ‘’கஷ்டம் ஏன்னா நான் இரண்டு காதிலேயும் கேட்கிறேனே!’’ என்று சொல்வதும் சுவையான விளம்பரம். ஆனால் இப்பொழுது அப்பகுதியை மட்டும் வெட்டிவிட்டு ஒளிபரப்புகிறார்களே! விளம்பர நேரத்தைக் குறைக்க இப்படி செய்தார்களோ?

# சன் டீவியிலும் ஒளிபரப்பிய அதே சில படங்களை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒளிபரப்ப வேறு படங்களே கிடைக்கவில்லையா இவர்களுக்கு? இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இப்படம் நூறாவது முறையாக ஒளிபரப்பப்படுகிறது என்று அறிவிப்பார்களோ!

சனி, 17 ஆகஸ்ட், 2013

பிச்சை புகினும் கற்கை நன்றே


நன்றி:-  எங்கள் பிளாகின் பாசிடிவ் செய்திகள் - கடந்தவாரம்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஞாயிறு, 9 ஜூன், 2013

ரசிகர்கள் ஆதரவில் தொலைக்காட்சியா? தொலைக் காட்சி தயவில் ரசிகர்களா??



சன் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த ராஜகுமாரி நெடுந்தொடர் திடீரென்று 'சுபம்' போடப்பட்டு நிறுத்தப்பட்டது. 'வம்சம்' எனும் புதியதொரு நெடுந்தொடருக்கு இடம் கொடுப்பதற்காக அவசர அவசரமாக முடித்து வைக்கப் பட்டுள்ளது ராஜகுமாரி தொடர்.
காசியில் ஒரு சாமியாரின் ஆசியோடு வளர்ந்த ராஜகுமாரி என்கிற நீலாம்பரி அவரை வளர்த்த குடும்பத்தை விட்டுவிட்டு தமிழ்நாட்டிலுள்ள அவரது தாயாரின் வீட்டிற்கு வந்து, தந்தை இறந்து போனதால் ஆதரவற்று நிற்கும் தாய்க்கும் இரண்டு தங்கைகளுக்கும் ஆதராவாக வேலைக்குப் போய் அவர்களை நன்கு காப்பாற்றி வரகிறாராம். திடீரென்று இறந்துபோன தந்தையின் தம்பி குடும்பம், நீலாம்பரியின் தாய் தங்கைகள்,  வளர்த்த குடும்பத்தினர், ஆசீர்வதித்த சாமிகள் என அனைவரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு சித்தப்பா மகனுக்கும் அவன் ஏமாற்றி கைவிட்ட பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்காகவே நீலாமரி என்கிற ராஜகுமாரி வந்தது போல திருமணத்தை முடித்து விட்டு ராஜகுமாரி தொடரையே முடித்துவிட்டார்களே இது நியாயமா?
இதே போல சில மாதங்களுக்கு முன்னர் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஆண்பாவம் என்ற நெடுந்தொடருக்கும் இதே (அதோ) கதிதான் ஏற்பட்டது. ஆதரவு அளித்துவரும் அல்லது ஆதரவு அளிக்காதிருக்கும் (இத்தொடர்களை தொடர்ந்து விடாது பார்த்து வரும்) ரசிகர்களைப்பற்றி இத் தொலைக்காட்சியினருக்கு அக்கறை கொஞ்சமும் கிடையாதா? யார் இதைக் கேட்பது? யாரிடம் இதைச் சொல்வது? இவற்றைப் பார்க்காமல் இருப்பதுதான் இதற்கு ஒரே தீர்வோ?!

திங்கள், 14 ஜனவரி, 2013

அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்


                      பொங்கல் நல்வாழ்த்துக்கள்




Add caption
அனைவருக்கும் இதயம் கனிந்த 

பொங்கல் நல்வாழ்த்துக்கள்