ஞாயிறு, 9 ஜூன், 2013

ரசிகர்கள் ஆதரவில் தொலைக்காட்சியா? தொலைக் காட்சி தயவில் ரசிகர்களா??



சன் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த ராஜகுமாரி நெடுந்தொடர் திடீரென்று 'சுபம்' போடப்பட்டு நிறுத்தப்பட்டது. 'வம்சம்' எனும் புதியதொரு நெடுந்தொடருக்கு இடம் கொடுப்பதற்காக அவசர அவசரமாக முடித்து வைக்கப் பட்டுள்ளது ராஜகுமாரி தொடர்.
காசியில் ஒரு சாமியாரின் ஆசியோடு வளர்ந்த ராஜகுமாரி என்கிற நீலாம்பரி அவரை வளர்த்த குடும்பத்தை விட்டுவிட்டு தமிழ்நாட்டிலுள்ள அவரது தாயாரின் வீட்டிற்கு வந்து, தந்தை இறந்து போனதால் ஆதரவற்று நிற்கும் தாய்க்கும் இரண்டு தங்கைகளுக்கும் ஆதராவாக வேலைக்குப் போய் அவர்களை நன்கு காப்பாற்றி வரகிறாராம். திடீரென்று இறந்துபோன தந்தையின் தம்பி குடும்பம், நீலாம்பரியின் தாய் தங்கைகள்,  வளர்த்த குடும்பத்தினர், ஆசீர்வதித்த சாமிகள் என அனைவரையும் அப்படி அப்படியே விட்டு விட்டு சித்தப்பா மகனுக்கும் அவன் ஏமாற்றி கைவிட்ட பெண்ணுக்கும் திருமணம் செய்வதற்காகவே நீலாமரி என்கிற ராஜகுமாரி வந்தது போல திருமணத்தை முடித்து விட்டு ராஜகுமாரி தொடரையே முடித்துவிட்டார்களே இது நியாயமா?
இதே போல சில மாதங்களுக்கு முன்னர் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஆண்பாவம் என்ற நெடுந்தொடருக்கும் இதே (அதோ) கதிதான் ஏற்பட்டது. ஆதரவு அளித்துவரும் அல்லது ஆதரவு அளிக்காதிருக்கும் (இத்தொடர்களை தொடர்ந்து விடாது பார்த்து வரும்) ரசிகர்களைப்பற்றி இத் தொலைக்காட்சியினருக்கு அக்கறை கொஞ்சமும் கிடையாதா? யார் இதைக் கேட்பது? யாரிடம் இதைச் சொல்வது? இவற்றைப் பார்க்காமல் இருப்பதுதான் இதற்கு ஒரே தீர்வோ?!