திங்கள், 1 அக்டோபர், 2012

தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காகவா ?


முந்தானை முடிச்சு தொடரில் மீனாவை வீட்டில் வேலைக்காரிபோல இருக்கச்சொல்லிவிட்டு அவளது கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யப்போகிறார்களாம்.

உதிரிப்பூக்கள் தொடரில் தெட்சிணாமூர்த்தி இரண்டு மனைவிகளுடன் வாழ்வதாகவும் இது தெரிந்தவுடன் முதல் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து வாழவதாகவும் காண்பிக்கிறார்கள்.

திருமதி செல்வம் கதையில் செல்வம் அர்ச்சனாவுடன் வாழ விடமாட்டேன் அவனைப்பிரித்து கல்யாணம் செய்து காட்டுகிறேன் என்று நந்தினி சபதம் செய்து அதற்கான வேலைகளை செய்து வருகிறாளாம்.

தங்கம் தொடரில் ஐயா இரண்டு மனைவிகளுடனும், அவர்களுடைய குழந்தைகளுடனும் வாழ்வதே முக்கிய கதை.

தென்றல் நெடுந்தொடரில் டாக்டரையா முதல் மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியுடன் வாழ்வதும் அவளைப்பிரிந்து முதல் மனைவியுடன் வாழ்வதுமாகக் கதை செல்கிறது.

செல்லமே தொடரிலும் வடமலை செல்லம்மாவை விட்டுவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்து கொள்வதும் ஆனால் செல்லம்மாவின் குழந்தைகள் மட்டும் வேண்டும் என்று அதற்காகப் போராடுவதுமாகக் கதை

அழகியில் சோமு மனைவி மதியிருக்க அவளை விட்டுவிட்டு இன்னொருத்திக்கு வலைவீசுவதுமாக கதையை அமைத்திருக்கிறார்கள்.

நாதஸ்வரம் தொடரில் மகேஷின் கணவன் செல்வரங்கம் அவனது முதலாளியம்மாவுடன் பழகுவதாகவும் அவனது அக்காவே அவர்களைச் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் முதலில் சென்ற கதையில் ஒருவழியாக அவன் இப்போது மகேஷுடனேயே சேர்ந்து வாழ்வதாக கதையை மாற்றிவிட்டார்கள். இதற்காக டைரக்டரைப் பாராட்டலாம்,

இந்த போக்கிலிருந்து மாறுபட்டிருப்பது இப்போதைக்கு பிள்ளைநிலாவும், கார்த்திகைப் பெண்களும்தான்.

இப்படி கிட்டதட்ட எல்லா கதைகளிலுமே இரண்டு பெண்டாட்டிகள் என்று கதை, திரைக்கதையை அமைப்பதைப் பார்த்தால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே! தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா?